சென்னை: தமிழக தேர்தல் ஆணைய செயலாளரை திடீரென மாற்றியது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த எஸ்.பழனிச்சாமி, தற்போது டவுன் பஞ்சாயத்து இயக்குநராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், "உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் பழனிச்சாமியை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் "விசுவாசமாகப்" பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?
இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினரை ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா? " இவ்வாறு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.