ஐஐடி மாணவி தற்கொலை; கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்: திருமாவளவன்

தமிழகம்
Updated Nov 14, 2019 | 20:12 IST | Times Now

மாணவ, மாணவிகள் சாதி மதரீதியான நெருக்கடிகளுக்கும் மனஅழுத்தத்திற்கும் ஆளாகாமல் கல்வி கற்கும் வகையில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் - தொல்.திருமாவளவன்

Thol.Thirumavalavan, VCK Leader
தொல்.திருமாவளவன், விசிக தலைவர்  |  Photo Credit: Twitter

சென்னை:  ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலையை கொலை வழக்காகவே பதிவு செய்து மாணவியின் மரணத்துக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடியில் முதுகலை வகுப்பில் முதலாமாண்டு பயின்று வந்த கேரள மாநிலத்தைச் சார்ந்த முஸ்லிம் மாணவி ஃபாத்திமா லத்தீஃப் கடந்த நவம்பர்-9 அன்று தனது விடுதி அறையில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டார் என்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவர், "தனது சாவுக்குத் தனது பேராசிரியர் ஒருவரே காரணம்' என்று பெயரைக் குறிப்பிட்டுள்ள தற்கொலைக் குறிப்பைக் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். இது மேலும் கூடுதல் அதிர்ச்சியை அளிப்பதாகவுள்ளது.

ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இது போன்ற அவலங்கள் அரங்கேறுவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, தலித் சமூகத்தை மாணவர்கள் ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன் போன்றவர்களின் வரிசையில் தற்போது முஸ்லிம் மாணவி ஃபாத்திமாவும் பலியாகியுள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் சனாதன சக்திகளின் வெறுப்பு அணுகுமுறைகள்தான் இத்தகைய பலிகளுக்குக் காரணமாகவுள்ளன. எனவே , இதனை தற்கொலை எனக் கருதாமல் நிறுவனக் கொலையாகவே கருத வேண்டியிருக்கிறது. ஆகவே, இதனை கொலை வழக்காகவே பதிவு செய்து மாணவியின் மரணத்துக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் தலைவிரித்தாடும் சாதி-மதவெறி வன்கொடுமைகளால் மாணவ மாணவியரின் தற்கொலைகள் தொடர்கின்றன.

இந்நிலையில் இத்தகைய தற்கொலைகளுக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை கமிஷன் அமைத்திட வேண்டும் என மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. கல்வி நிறுவனங்களில் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவர்களின் மீது நிகழ்த்தப்படும் சாதி மதரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மாணவ மாணவிகள் சாதி மதரீதியான நெருக்கடிகளுக்கும் மனஅழுத்தத்திற்கும் ஆளாகாமல் கல்வி கற்கும் வகையில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். மாணவி ஃபாத்திமாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பலியான மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக மத்திய அரசு ரூ.1 கோடி வழங்க வேண்டும்" என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

NEXT STORY