தஞ்சாவூர்: மாமன்னர் ராஜராஜ சோழனின் 1034-வது சதய விழா தஞ்சை பெரியகோயிலில் மங்கள இசையுடன் இன்று காலை தொடங்கியது.
மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா ஆண்டுதோறும் அவர் பிறந்த நட்சத்திரமாகிய ஐப்பசி சதய நாளன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ராஜராஜ சோழனின் 1034-வது சதய விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ராஜராஜ சோழனின் 1034-வது சதய விழாவில் கருத்தரங்கம், திருமுறைப் பண்ணிசை, திருமுறை அரங்கம், திருமுறை இசையரங்கம், வயலின் இன்னிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்று மாலை, ’மாமன்னா் ராஜராஜ சோழனின் பெரும் புகழுக்குக் காரணம் ஆட்சித் திறனா? பக்திப் பணியா?’ என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறுகிது.
நாளைய தினம், ராஜராஜனின் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை வீதி உலா, பெருவுடையாா், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு, பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், ’தஞ்சை பெரிய கோயிலின் கட்டுமான விந்தைகள்’ என்ற தலைப்பில் ஒலி-ஒளிக் காட்சி நாளை மாலை நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து நடைபெரும் நிறைவு விழாவில் தொல்லியல் கட்டுமானங்கள் புனரமைப்புப் பொறியாளா் எஸ்.ராஜேந்திரன், சோழா் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவா் அய்யம்பேட்டை என்.செல்வராஜ் ஆகியோருக்கு மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கப்படவுள்ளது. பின்னர், திரைப்படப் பாடகா் வேல்முருகன், கோபு குழுவினரின் கிராமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.