நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மீது சமூக ஊடகங்களில் மதரீதியாக எழுந்த சர்ச்சைகளுக்கு சிவகுமார் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகுமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் நாத்திகவாதிகள் என்றும், அவர்கள் மதம் மாறிவிட்டதாகவும் சில சர்ச்சைகள் எழுந்தது. இதற்கு விளக்கமளிக்கும் விதமாக இன்று நடிகர் சிவகுமார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா? சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகர், விநாயகர், லஷ்மி சரஸ்வதி, காமாட்சி, மீனாட்சி என சாமி கும்பிடுபவர்கள் நம் நாட்டில் பல கோடி பேர் இருக்கிறார்கள். அல்லாவையும், இயேசுவையும் கும்பிடுபவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். 'கடவுளுக்கு வடிவம் இல்லை. ஆண், பெண் என்ற பேதம் இல்லை. கடவுள் என்பது உணரக்கூடிய விஷயம், விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல' என்று சொன்னவர் மகாத்மா காந்தி. ஆனால் அவரே உயிர்விடும்போது 'ஹே ராம்' என்று சொன்னதாக வரலாறு சொல்லுகிறது. அதாவது அவர் ராமனை வணங்கியிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் " நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். என்னுடைய அப்பா முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும், உபவாசம் இருந்து, பழனி மலைக்கு சென்று திருப்புகழ் மொத்த பாடலையும் மணபாடமாகச் சொல்லி சாமி கும்பிட்டு திரும்பு வருவார். நானும் முருக பக்தன். 5 வயதில் இருந்து முருக படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன். இப்போதும் எங்கள் வீட்டு பூஜையறையில் எல்லா சாமி படங்களும் இருக்கின்றன. இந்திய மண்ணுக்கு பெருமை சேர்ப்பது ராமாயணம், மகாபாரதம். அந்த மாபெரும் காவியங்களின் முழுக்கதையையும் பாடல்களுடன், இரண்டு மணி நேரம் 5000 பேருக்கு முன்னிலையில் உரையாக நிகழ்த்தியிருக்கிறேன். யூட்டியூப்பில் இப்பொழுதும் கூட அதை நீங்கள் பார்க்கலாம். உண்மையான பக்தி என்பது அடுத்தவரை நேசித்தல், அவர்களை சமமாக மதித்தல், இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு ஓடிச்சென்று உதவி செய்தல். இதைச் செய்பவன்தான் உண்மையான பக்திமான், உயர்ந்த பக்திமான்! எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன" என அந்த வீடியோவில் நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.