வாட்ஸ்அப் செயலியில் குறுஞ்செய்திகள் தாமாக அழிந்துவிடும் அம்சம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் செயலியின் 2.19.275 பீட்டா பதிப்பில் இந்த அம்சம் அறிமுகமாகியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குறுஞ்செய்திகள் தாமாக அழிந்துவிடும் வகையில் பயனர்கள் அமைத்துக்கொள்ளலாம்.
இந்த அம்சம் எல்லோருக்கும் பயன்படாது என்றாலும் வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுடன் ரகசிய தகவல்கள் பகிர்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும். டெலிகிராம் செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் உள்ளது. ’சீக்ரட் சேட்’ எனும் வசதி கொண்டு டெலிகிராம் செயலியில் குறுஞ்செய்தி அனுப்பினால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தாமாக மறைந்துவிடும்.
டெலிகிராம் செயலியின் சீக்ரட் சேட் வசதி மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் சர்வரில் சேமிக்கப்படாது என்று கூறும் அந்நிறுவனம், அதனை ஃபார்வர்ட் செய்யவோ ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவோ முடியாது என்றும் கூறுகிறது.
வாட்ஸ்அப் செயலியின் குரூப் சேட் வசதியில் தற்போது இந்த அம்சம் அறிமுகமாகியுள்ளது. 5 நொடிகள் முதல் 1 மணிநேரம் வரையிலான காலத்திற்குள் குறுஞ்செய்திகள் தாமாக அழிந்துவிடும் படி பயனர்கள் அமைத்துக்கொள்ளலாம்.