மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலையில் போலீசார் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை மதுரை மத்திய சிறை வளாகத்தில் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிறைத்துறையின் உதவி ஆணையர் வேணுகோபால் தலைமையில் ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என 120 பேர் கொண்ட சிறைத்துறை போலீசார் மத்திய சிறையில் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
இதில், சிறை வளாகம், கழிவறைகள், கைதிகளின் அறைகள், சமையல் கூடம் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டனவா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மதுரை மத்திய சிறையில் மட்டும் விசாரணை கைதி, தண்டனை கைதி என 1000-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த கைதிகளில் சிலர் சிறைக்குள் திருட்டுத்தனமாக கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருவதாக அடிக்கடி எழுந்து வருகிறது. இதன் காரணமாகவே போலீசார் அவ்வப்போது சோதனையில் ஈடுபடுகின்றனா்.