தமிழகத்தை உலுக்கிய, கோவையில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்குதண்டனையை இன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2010ஆம் ஆண்டு கோவையில் 11வயது சிறுமி முஸ்கானும் அவரது 8வயது தம்பி ரித்திக்கையும் கொலைசெய்ததாக அவர்களது ஓட்டுநர் மோகன கிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மோகனகிருஷ்ணன் தப்பியோடும்போது என்கவுண்டரில் கொல்லப்பட, துணைபோன மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், மனோகரனுக்கு 2012ஆம் ஆண்டு இரட்டை தூக்குதண்டனையும் 3 ஆயுள் தண்டனையும் வழங்கி பரபரப்புத் தீீர்பளித்தது. அதன்பின் மனோகரன் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தூக்குதண்டனையை நிறுத்திவைக்கக் கோரி மனோகரன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனால் அக்டோபர் 16ஆம் தேதிவரை மனோகரனை தூக்கில் போட தடைவிதிப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று நீதிபதிகள் மனோகரனுக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
என்ன நடந்தது?
கோவை தொழிலதிபரின் குழந்தைகள் முஸ்கானும் ரித்திக்கும். தினமும் அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஓட்டுநர் மோகன கிருஷ்ணன் 2010 அக்டோபர் 29ஆம் தேதியன்று அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் கடத்திச் சென்றுள்ளார். பின் அவரது நண்பர் மனோகரனின் உதவியோடு முஸ்கானை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இதற்கு இடைஞ்சலாக இருந்த ரித்திக்கையும் கொலை செய்துவிட்டு பொள்ளாச்சி பி.ஏ.பி பிரதான வாய்க்காலில் சடலங்களைப் போட்டுவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
பின் இருவரையும் கைது செய்தது காவல்துறை. குழந்தைகளைக் கொலை செய்த இடத்தை காட்டச் சென்றபோது மோக கிருஷ்ணன் தப்பியோட முயல அவர் என்கவுட்னரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டு நடைபெற்ற வழக்கில் தற்போது தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.