நடிகர் சூர்யாவின் 39-வது படத்தின் தொழிநுட்பக்குழு பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக நேற்று வெளியானது.
நடிகர் சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் 'சூரரை போற்று' படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்தபடியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில் நேற்று இயக்குனர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் சிவாவின் 'விஸ்வாசம்' படத்திற்கு இசையமைத்த டி.இமான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். நடிகர் சூர்யாவுக்கு இமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. மேலும் இயக்குனர் சிவாவின் படங்களுக்கு வழக்கமாக ஒளிப்பதிவு செய்யும் வெற்றி இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். இது தவிர படத்தொகுப்பாளர் ரூபன், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன், கலை இயக்குனர் மிலன் ஆகியோரும் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். இயக்குனர் சிவாவின் முந்தைய படமான 'விஸ்வாசம்' படத்தின் தொழில்நுட்பக்குழு இப்படத்திலும் பணியாற்றுகின்றனர்.
அதிக எதிரார்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தற்காலிகமாக 'சூர்யா-39' என்று அழைக்கப்படுகிறது. 'விஸ்வாசம்' படத்தை போலவே இப்படமும் பெரும்பாலும் கிராமத்து பின்னணியில் உருவாக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இப்படத்தின் தலைப்பு பற்றியும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக்கு சிவா இயக்கத்தில் ரிலீஸான சிறுத்தை மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக அமைந்தது. இதனால் சூர்யா ரசிகர்கள் இந்தப் படத்தை ஆவலோடு எதிர்பாத்துள்ளார்கள். இதற்கிடையே சூர்யாவின் காப்பான் திரைப்படம் வரும் செப்டமர் 20ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.